குழப்பவாதிகளான கம்யூனிஸ்ட்கள்! நாளொரு கூட்டணி.. பொழுதொரு நிலைப்பாடு! சரமாரியாக விமர்சித்த காங்.,

0
18

கன்னியாகுமரி: 2 தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு எனவும், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு இன்னொரு கூட்டணிக்கு வந்தார்கள்.. அந்தக் கூட்டணியிலும் நிலையாக இல்லாமல் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களின் நிலைப்பாடே சரியாக இல்லை என்று தான் அர்த்தம் எனவும், தேர்தலில் தனித்துப் போட்டியிருவது கண்டிப்பாக கம்யூனிஸ்ட்களுக்குத் தான் பின்னடைவு என காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்டத்திலுள்ள இரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பயணிகளுக்கான சேவைகளை துரிதமாக மேம்படுத்தவும் கோரி மத்திய அரசு மத்தும் இரயில்வே துறையை கண்டித்து கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் தலைமையில் இரணியல் இரயில் நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிழக்கு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்திய அரசையும், இரயில்வே துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த்,” தொடர்ந்து ரயில்வே துறை செயல்பாடுகள் சரியில்லை. அதாவது வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. பணிகள் அனைத்தும் தாமதமாக இருக்கிறது. பாலங்கள் நிறைவடையாமல் இருக்கிறது, கால்வாய்கள் இணைக்கப்படாமல் இருக்கிறது போன்ற பல பிரச்சனைகள் இருக்கின்றன. ரயில் நிறுத்தங்கள் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

அதை மீண்டும் கொண்டு வரக் கேட்டாலும், அதற்கும் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருக்கிறது. புதிய ரயில்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம், அதற்கும் பரிந்துரை செய்தும் எதுவும் செய்யாமல் கன்னியாகுமரி மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் இந்த ரயில்வே துறையைக் கண்டித்து, ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம்.

நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுகின்றனர். அந்தக் கட்சி அவர்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். யார் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் கட்சி மற்றும் எங்கள் கூட்டணி உறுதியாக இருக்கிறது, வெற்றிக் கூட்டணியாக இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

த.வெ.க வுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா ஜனநாயகப் படுகொலை என்று விமர்சித்தார்கள். இப்போது தனித்து வேட்பாளரை அறிவித்துப் போட்டியிடப் போகிறோம் என்று சொல்கிறார்கள். இது கூட்டணிக்குப் பின்னடைவோ, வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. இது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு.

ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள். அதற்குப் பிறகு கள நிலவரப்படி இன்னொறு கூட்டணிக்கு வந்தார்கள். அந்தக் கூட்டணியிலும் நிலையாக இல்லாமல் ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களின் நிலைப்பாடே சரியாக இல்லை என்று தான் அர்த்தம். கண்டிப்பாக இது அவர்களுக்குத் தான் பின்னடைவாகும்” என கம்யூனிஸ்டுகளை காட்டமாக விமர்சித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here