திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது அலகில், 320 டன் அணு உலை அழுத்தகலன் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில், ரஷ்யாவின் பங்களிப்புடன் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் திட்டத்தின் 5-வது அலகில், அணு உலை கட்டிடத்துக்குள் ‘அணு உலை அழுத்தக்கலன்’ (reactor pressure vessel) வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக, இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் அக்கழகம் வெளியிட்ட பதிவு: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5-வது அலகில் முக்கிய உபகரணங்களை நிறுவுவதற்கு அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து, அங்கு முக்கிய அணுமின் நிலைய உபகரணங்களை நிறுவும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
அதன்படி இந்த அணுஉலை கட்டிடத்துக்குள் ‘அணு உலை அழுத்தக் கலன்’ வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இது, 320 டன் எடை கொண்டதாகும். இதன்மூலம் இந்திய அணுசக்தி கழகம் மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இந்தியாவின் பொறியியல் திறமைக்கு முக்கிய சான்றாகும். இந்தச் சாதனை, அணு நீராவி விநியோக அமைப்பு உபகரணங்களை நிறுவும் பணியின் தொடக்கம் ஆகும். இந்திய அணுசக்திக் கழகம் மற்றும் ரஷ்யாவின் ஏஎஸ்இ அமைப்பு இடையே வலுவான ஒத்துழைப்பு நீடிக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் முழுமையாக செயல்படும்போது 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.















