தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி பகுதி பருத்தியறை தோட்டத்தை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (60). இவரது மனைவி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த மரிய ஜான்சன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் நேற்று முன்தினம் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை அடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெத்தேல்புரத்தில் வசிக்கும் அவரது சகோதரி எட்வின் மேரி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது ஜான்சன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மரிய ஜான்சன் நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.