ராமாபுரத்தில் பயங்கர தீ விபத்து: மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்

0
231

ராமாபுரத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வீட்டை விட்டுவெளியேறினர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

சென்னை ராமாபுரம் கோத்தாரி நகரில் செயல்படும் பழைய பொருட்கள் விற்பனை கடையில் நேற்று மாலை திடீரென தீ பிடித்தது. பின்னர், அருகே இருந்த கார் மெக்கானிக் செட், பர்னிச்சர் குடோன் என அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவியது. தகவல் அறிந்து விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கட்டுக்கடங்காத தீ வானுயர கரும்புவையுடன் கொழுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகே இருந்த குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராமாபுரம், விருகம்பாக்கம், கோயம்பேடு, தி நகர், ஜெ.ஜெ நகர் என பல்வேறு பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

இந்த தீ விபத்தில் பழைய பொருட்கள் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர் குடோனில் இருந்த கட்டில் மெத்தை, ஷோபா மற்றும் கார் ஷெட்டில் இருந்த கார்களும் சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து ராமாபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here