நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பலரும் பங்கேற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள், சன்சத் மார்க் காவல் நிலையத்துக்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். காயமடைந்த சில போராட்டக்காரர்களுக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியைத் தொடங்கிய போராட்டக்காரர்கள் மீது, ‘பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ அருகே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைவதன் காரணமாக, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய டெல்லியின் சில பகுதிகளில் பலத்த பாதுகாப்பு மற்றும் இணைய சேவை முடக்கம் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கானோர் ஜந்தர் மந்தரில் திரண்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற சாலைக்கு அருகே போராட்டக்காரர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதுடன், சிலரைக் கைது செய்து தடுத்து வைத்தது.
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுடெல்லியில் வாகனப் போக்குவரத்திற்காக விகாஸ் மார்க் மற்றும் ஐடிஓ பகுதிகளை டெல்லி காவல் துறை முடக்கியுள்ளது. மேலும், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் அதிகளவில் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
ஜே.பி.நட்டாவை சந்திக்கும் போராட்டக்காரர்கள்:
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்க உள்ள நிலையில், சிஜேபி நிறுவனர் அபிஜீத் டிப்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து சவுரவ் தாஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேரம் காலை 11:52 மணி. அசுதோஷ் ரங்காவும் நானும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தைக்காக அரசு காலையிலேயே எங்களைத் தொடர்புகொண்டது. எங்கள் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன. இளைஞர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர்’ எனத் தெரிவித்திருந்தார்.
சோனம் வாங்சுக் அழைப்பும், உஷாரான காவல் துறையும்:
முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரோடு இணைந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் வாங்சுங்கை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.
இதனிடையே, மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட அறிக்கையில், ‘வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அநீதிகளை தடுக்க வேண்டும். என்னை வலுக்கட்டாயமாக சிறை வைத்து உள்ளனர். இதுபோன்ற அநீதிகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். தற்போது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற பேரணிக்கு முறைப்படி அனுமதி பெறவில்லை. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நாடாளுமன்ற வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் அரணை மீறி நாடாளுமன்றம் நோக்கி முன்னேறுவோர் கைது செய்யப்படுவார்கள்’ எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
