ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண் – வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் திரும்பிய காசோலை

0
28

அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.நாகலட்சுமி எனும் பெண் பக்தர் கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தி வந்திருந்தார். அப்போது ராமர் கோயில் தரிசனம் முடித்தவர் ரூ.10,000 ரொக்கமாக நன்கொடை அளித்திருந்தார்.

அடுத்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அலுவலகம் சென்றார். அங்கு ரூ.4 கோடிக்கான காசோலையை நன்கொடையாக அளித்து அதை, கோயில் ஊழியர்கள் நலனுக்காக பயன்படுத்தக் கோரி கேட்டுக் கொண்டார்.

ஆனால், அறக்கட்டளை அத்தகைய உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை. இந்நிலையில், அப்பெண்ணின் காசோலை அறக்கட்டளையின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.

அதில், அப்பெண் பக்தரின் வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பதாகக் காசோலை திரும்பி விட்டது. இதனால், காசோலையை வழங்கிய அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வங்கி நிர்வாகம் தயாராகி வருகிறது.

வங்கி நடைமுறைகளின்படி, காசோலை பணமாக்கப்படாமல் திரும்பினால், வங்கி கணக்கு வைத்திருப்பவருக்குத் தகவல் தெரிவிக்கும். அதன்படி, காசோலை வழங்கியது மற்றும் கணக்கில் போதிய நிதி இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு வங்கி அந்தப் பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளது.

காசோலை பெரும் தொகைக்குரியது என்பதால், வங்கி நிர்வாகம் இவ்விவகாரத்தை தீவிரமாகக் கருதுகிறது. மேலும், காசோலை திரும்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன.

அந்தப் பெண்ணின் கைப்பேசி எண் இருப்பதால் அவருடன் பேசித் தீர்வு காணவும் அறக்கட்டளை நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இதுபோல், கோயிலுக்கான நன்கொடையாக அளிக்கப்பட்ட காசோலைகள் வங்கிக்கே திரும்புவது முதன்முறை அல்ல. ராமர் கோயில் கட்டுமானத்திற்கான 2020-ம் ஆண்டு ‘நிதி சமர்ப்பண் அபியான்’ (நிதி திரட்டும் இயக்கம்) துவக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், 45 நாட்களில் சுமார் ரூ.3,500 கோடி நிதி திரட்டப்பட்டது.

இதில் ஏராளமான காசோலைகளும் அடங்கும். அக்காலகட்டத்தில், தொழில்நுட்பக் காரணங்களால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான காசோலைகள் வங்கிக்கு திரும்பின.

அவற்றில் பெரும்பாலானவை பின்னர் மீண்டும் வங்கியில் செலுத்தப்பட்டுத் தொகை பெறப்பட்டது. எனினும், சுமார் ரூ.22 கோடி மதிப்பிலான தொகை வசூலாவது நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. பல்வேறு வழிகள் மூலம் ராமர் கோயிலுக்கு மாதந்தோறும் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை நன்கொடை கிடைக்கிறது. இதில் ரொக்கம், இணையவழிப் பரிமாற்றம் மற்றும் காசோலை மூலமான நன்கொடைகள் ஆகியவை அடங்கும்.

காசோலைகள் மூலம் சுமார் ரூ.10 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை பெறப்படுகிறது. தமிழ்நாட்டின் பெண் பக்தரின் காசோலை பணமின்றி திரும்பியது அறக்கட்டளையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.

இதன் காரணமாக, அதிக மதிப்புள்ள காசோலைகளைப் பெறுதல், வங்கியில் செலுத்துதல் மற்றும் அவற்றைச் சரிபார்த்துப் பணம் பெறுதல் ஆகியவற்றில் அறக்கட்டளை கூடுதல் கவனத்தைச் செலுத்த உள்ளது. இருப்பினும், இது குறித்து அறக்கட்டளை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here