ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து அணி.
மேற்கு இந்தியத் தீவுகளின் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா 9 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். ஜேன் கிரீன் 28, நிக்கோலஸ் டாவின் 20, டேவிட் வைஸ் 14 ரன்கள் சேர்த்தனர். ஸ்காட்லாந்து அணி சார்பில் பிராட் வீல் 3, பிராட் கியூரி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரிச்சி பெரிங்டன் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மைக்கேல் லீஸ்க் 17 பந்துகளில், 4 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் விளாசினார். மைக்கேல் ஜோன்ஸ் 26, பிரண்டன் மெக்முல்லன் 19 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்காட்லாந்து அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. இங்கிலாந்துடன் அந்த அணி மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டிருந்தது. நமீபியா அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனை சூப்பர் ஓவரில் வென்றிருந்தது.