கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சைதை மேற்கு பகுதி 140-வது வார்டில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3.64 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அம்மா பூங்காவில் புதிய நுழைவுவாயில், கழிவறைகள், முதியோருக்கான சிறப்பு வழித்தடம், குழந்தைகள் விளையாடும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகள் 3 மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.
கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும், நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.