கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளை ஒளிரவிட்டு, இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து பண்டிகையை கிறிஸ்துவர்கள் இன்புற வரவேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே களைகட்டியது.
சென்னை சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் லஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூயமரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம், நுங்கம்பாக்கம் செயின்ட் தெரசா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு திருப்பலிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதில் புத்தாடை அணிந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கேக்கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையிலும் பல்வேறு பிரிவு தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகளும், ஜெபங்களும் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டன.
சின்னமலையில் உள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில்
அண்ணாமலை பங்கேற்பு: இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர். ஆலயங்களில் விடிய விடிய நடத்தப்பட்ட ஆராதனைகளின்போது கிறிஸ்துவர்களிடம் உற்சாகம் கரைபுரண்டது. தேவாலயங்கள் விழாக் கோலமாக மாறியிருந்தது. சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று காலை நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். ஆலயத்தின் முன்வரிசையில் அமர்ந்து போதகரின் சிறப்பு கிறிஸ்துமஸ் உரையை கேட்டார்.
பின்னர் ஆலயத்துக்கு வந்திருந்த கிறிஸ்துவர்களுக்கு கைக்குலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் “நான் 1 முதல் 7-ம் வகுப்பு வரை கிறிஸ்துவ பள்ளியில் தான் படித்தேன். அதனால் அடிக்கடி தேவாலயத்துக்கு செல்லும் பழக்கம் எனக்கு உண்டு. இன்றைக்கு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டினேன்.” என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
ஆளுநர் ஆர்.என்.ரவி: கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். இயேசு கிறிஸ்து கொண்டுள்ள அன்பு, தன்னலமற்ற சேவை, கருணை, மன்னிப்பு ஆகியவை நம் வாழ்வில் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன், இரக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்கவும் வலுப்படுத்தட்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ‘கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் பொன்மொழியை கூறிய இயேசுபிரானின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
தவெக தலைவர் விஜய்: இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம் நிலைத்து நீடித்திருக்கட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.