கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மருதம்பாறை பகுதியில் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் பள்ளி மற்றும் பொது கிணறும் உள்ளன. தற்போது அந்தப் பகுதியில் வெளிநபர்கள் பட்டா பெற்று குடியிருந்து வருகின்றனர்.
புதிய வீடுகள் வந்தபோது பொது கிணற்றுக்கும், உட்பகுதியில் உள்ள 13 குடியிருப்புகளுக்கும் செல்ல மக்கள் முன்பு பயன்படுத்தி வந்த பாதையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மக்கள் பயன்படுத்திய பாதையை அடைக்க முயன்றபோது பிரச்சினை ஏற்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
மீண்டும் பாதையை தனிநபர் நேற்று (ஏப்ரல் 16) அடைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்ற முயன்றனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின் இரவு 7 மணி அளவில் தற்காலிகமாக நடக்கும் வகையில் பாதை அமைத்துக் கொடுத்த பின்பு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.