என் சகோதரி டப்பிங் பணிகளுக்குச் செல்லும் போது அவருடன் நான் துணைக்கு சென்று கொண்டிருந்த காலம் அது. வருடம் நினைவில் இல்லை. அந்த காலகட்டத்தில் சென்னையில் சோழா ஓட்டலுக்கு பின்னால் காதம்பரி, ராம்லீலா என இரண்டு டப்பிங் தியேட்டர்கள் அடுத்தடுத்து இருந்தன.
ராம்லீலா தியேட்டருக்கு அக்காவுடன் சென்றிருக்கும் போது அங்கு நீலக்கலர் வேஷ்டி, ஒரு சட்டை அணிந்து வந்து என் சகோதரி ஹேமமாலினியிடம், “வணக்கம் நான்தான் ராதாரவி” என்று புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
நான் அருகில் நின்றேன். அப்போது நான் அதிகம் பேச மாட்டேன் என்பதால் அவரிடம் பேசிக்கொள்ளவில்லை. அக்கா, அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். என் அப்பா நிலக்கிழார் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
என் தந்தையை எம்.ஆர்.ராதாப்பா அண்ணன் என்றுதான் அழைப்பார். மறைந்த எம்.ஆர்.ஆர்.வாசு அண்ணன், என் தந்தையை பெரியப்பா என்று கூப்பிடுவார். இதை நான் அந்த காலத்தில் பார்த்திருக்கிறேன்.
பிறகு நானும் டப்பிங் துறைக்கு வந்துவிட்டதால் ராதாரவி அண்ணனை பல இடங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நெருங்கிப் பழகி விட்டோம். அவரை எங்கு பார்த்தாலும் காலைத்தொட்டு நமஸ்காரம் செய்வதும் கன்னத்தில் முத்தம் கொடுப்பதும் என் வழக்கம்.
அன்றிலிருந்து அவர் எங்கள் குடும்பத்துக்கு மூத்தவராகி விட்டார். என் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது விளம்பரங்கள் வந்தால், என் மனைவி அதை மியூட் பண்ணிவிட்டுச் சமையல் வேலை செய்வார்.
என் மகள் ஐஸ்வர்யா, சவுண்ட் இல்லாமல் வரும் அந்த விளம்பரங்களுக்குப் பேசிப்பார்த்துக்கொண்டிருப்பார். குழந்தை ஏதோ பேசுகிறது என கண்டுகொள்ள மாட்டேன். பிறகு டப்பிங் பேச ஏதாவது குழந்தைகளின் குரல் தேவை என்றால் என் அக்கா, ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு செல்வார்.
பின்னர் அவர் விஸ்காம் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் ஒரு விளம்பரப் படம் ஒன்றைக் காண்பித்தார். நான் நன்றாக இருக்கிறது என்று சொன்னேன். உடனே “அதில் வரும் கதாநாயகிக்கு நான்தான் பேசியிருக்கிறேன்” என்று சொன்னதும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும்.
பிறகு சில கரெக் ஷன்களை சொன்னேன். பிறகு அவருக்கும் டப்பிங் கார்டு வேண்டும் என்று கேட்டார். உடனடியாக ராதாரவி அண்ணனிடம் போய் சொன்னேன்.
அதுக்கென்ன வாரிசு அடிப்படையில் கொடுக்கலாம் என்று கார்டு கொடுத்து என் மகளுக்கு ஆசிர்வாதம் பண்ணினார். இன்று அவர் பிசியான டப்பிங் ஆர்டிஸ்டாக இருப்பதற்கு இறைவன் அருளும், அண்ணனது கைராசியும்தான் காரணம்.
ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதாப்பா எந்தளவுக்கு நாத்திகக் கொள்கைகளில் பிடிப்பு உள்ளவரோ, ராதாரவி அண்ணா ஆத்திகத்தில் அதிகப் பிடிப்புள்ளவர்.
“அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரா?” என்று நான் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், “அப்பா எதுவும் சொல்ல மாட்டார். ‘நாத்திகத்தை நான் நம்பறேன். உனக்கு என்ன பிடிக்குதோ அதை நீ நம்பு’ன்னு சொல்லியிருக்காருடா பாஸு” என்றார்.
பிறகு என் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்து டப்பிங் பேச வேண்டும் என்றபோது அவனுக்கும் டப்பிங் கார்டு வேண்டும் என்று கேட்டேன். அதற்கு என்ன முறையோ அதன்படி பணம் கட்டி வாங்கினோம்.
அதையும் அவரே ஆசீர்வதித்து கொடுத்தார். அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் அவர் இருக்கிறார் என்றால் நான் அவருடன்தான் எப்போதும் இருப்பேன். அவருக்கு நான் சொந்த தம்பி மாதிரி.
ஆரம்பத்தில் விஜய்காந்த் அண்ணன், ராதாரவி அண்ணன், வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.சந்திரன் மாமா, ‘மண்வாசனை’ பாண்டியன், தியாகு… இவர்கள் எல்லோரும் ஒரு நட்பு வட்டத்தில் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் நான் ஓர் உறவினர் மாதிரி. எல்லோரிடமும் எனக்கு நெருக்கமான பழக்கம்.
ஒரு நாள் காரைக்குடியில் படப்பிடிப்பு. ராதாரவி அண்ணனுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, வேறு படப்பிடிப்புக்காக நான் காட்டுமன்னார்கோயில் செல்ல வேண்டும். எப்போதும் எந்த ஊராக இருந்தாலும் நானே கார் ஓட்டிச் செல்வேன். அதனால், “என்னோட காட்சியை அப்புறமா எடுங்க.
தம்பி பாஸு முடிச்சுட்டு கிளம்பணும். நைட் கண் முழிச்சுட்டு வண்டி ஓட்ட வேண்டாம். அதனால் அவன் காட்சியை முதல்ல எடுத்துட்டு அனுப்புங்க” என்றார். என் தொழிலிலும் நலனிலும் அக்கறை கொண்டு அன்பு செலுத்துகிறவர் அவர் என்பதற்காக இதை சொன்னேன்.
பிறகு “ஊருக்குப் போய் சேர்ந்ததும் எந்த நேரமானாலும் எனக்கு மெசேஜ் போடு, நான் தூங்கிட் டேன்னா, காலைல போன்ல பேசு. அப்பதான்டா தம்பி எனக்கு நிம்மதியா இருக்கும்” என்று சொல்வார். ரவி அண்ணனுக்கு என் இயல்பான நகைச்சுவை நிறைய பிடிக்கும். படப்பிடிப்பின் போது அதை சொல்லு, இதை சொல்லு என்று கேட்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
தனக்கு ஒன்று தெரியவில்லை என்றால் மற்றவரிடம் கேட்க தயங்கவே மாட்டார். ஒருநாள் அவர் எனக்கு போன் பண்ணினார். எடுத்து ‘வணக்கண்ணே’என்றேன். ‘டேய் பாஸு, நான் தெலுங்கு படத்துல நடிச்சிட்டிருக்கேன்.
ஒரு தத்துவம் சொல்லணும், அது உண்மையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கணும், அதே நேரம் கேவலமாவும் இருக்கணும். அந்த மாதிரி ஏதாவது இருக்கா?” என்று கேட்டார். “இருக்கு” என்று சொன்னேன். “என்னடா, சொல்லி வாயை மூடலை, அதுக்குள்ள இருக்குன்னு சொல்லிட்டே” என்று கேட்டார். “இருக்குண்ணே.
கேளுங்க, சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, பிறகு சொன்னேன், “கஷ்டம் வந்தவனுக்கு நஷ்டம் வந்தா, பிரச்சினையை விரல் விட்டு எண்ண முடியாது. குஷ்டம் வந்தவனுக்கு கஷ்டம் வந்தா பிரச்சினையை எண்றதுக்கு விரலே இருக்காது” என்றேன்.
அவர் சிரித்துவிட்டு, “அடப்பாவி, இது உண்மையாகவும் இருக்கு, கேவலமாகவும் இருக்கு, கேட்டாலும் சிரிப்பு வருது. உன்னால மட்டும்தான்டா இப்படிலாம் யோசிக்க முடியும்” என்று பாராட்டிவிட்டு ‘இதை தெலுங்கில் நான் மாற்றிக்கொள்கிறேன்’ என்றார்.
அதே போல அவர் ஏதாவது கோபப்பட்டால் கூட ஒரு செகண்ட் மட்டும்தான் இருக்கும். அடுத்த நொடி, சகஜமாகி விடுவார். கள்ளம் கபடமில்லாத மனிதர். எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர். இன்றுவரை டப்பிங் யூனியன் தலைவராக இருக்கிறார். ஆயுள் உள்ளவரை அங்கு அவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.
அவருக்கு நிறைய பேர் வேண்டியவர்கள். நான் முன்பே குறிப்பிட்டிருக்கிற பங்காளி வீரமணி, கே.ஆர்.செல்வராஜ், இயக்குனர் டி.என்.பாலுமாமாவின் மகன் கதிர் மற்றும் நாடக நடிகர்கள் பலர் என எல்லோருமே அவருக்கு வேண்டியவர்கள். இன்றும் அவர் இல்லத்தில் நாடக நடிகர்கள் பலர் இருப்பார்கள்.
எல்லோரிடமும், “சாப்பிட்டியா?” என்று அக்கறையுடன் விசாரித்து விட்டு ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார். நட்பு வட்டம், நண்பர்கள் இல்லாமல் அவரால் தனியாக இருக்கவே முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எங்கள் குடும்பத்தில் அவர் மூத்தவர்! இறைவா எங்க ரவி அண்ணனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடு என்று இறைவனை வேண்டுகிறேன்.















