நெடுஞ்சாலை துறை சார்பில் செய்யூர் – வந்தவாசி – போளூர் இடையே ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலை: முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

0
35

தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் செய்யூர் – வந்தவாசி – போளூர் இடையே ரூ.1,141 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ. நீள சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் தற்போது வரை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16,421 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள், சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2,130 கி.மீ. நீளத்துக்கு முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 5 ஆயிரம் கி.மீ.க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில், செய்யூர் – பனையூர் இணைப்பு சாலை உள்ளிட்ட செய்யூர் – வந்தவாசி – போளூர் சாலை 109 கி.மீ. நீளத்துக்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தின்கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், ரூ.1,141.23 கோடி திட்ட மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை செயலர் ஆர்.செல்வராஜ், சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்ட இயக்குநர் பாஸ்கர பாண்டியன், தலைமை பொறியாளர் டி.ஜெபசெல்வின் ஆகியோர் பங்கேற்றனர்.

இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி, சேத்துப்பட்டுக்கு புறவழி சாலைகள், மழைநீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள், தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு செலவினம் உள்ளிட்டவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

கிழக்கு கடற்கரை சாலை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் – மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இந்த சாலை இணைக்கிறது. 3 ஊர்களுக்கு புறவழி சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகன போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 67 கிராமங்களுக்கு விவசாய விளைபொருட்களை எடுத்துச் செல்லவும், நகர்ப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு மக்கள் எளிதாக சென்றுவரவும் இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here