கே.பி.ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’!
விஜய் நடித்த ‘புதிய கீதை’, நந்தா நடித்த ‘கோடம்பாக்கம்’, சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் அவர், கதையின் நாயகனாக நடிக்கிறார்.
‘யுனைடெட் ஆர்ட்ஸ்’, எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா மற்றும் டைட்டில் டீஸர் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே நடைபெற்றது.
படம் பற்றி இயக்குநர் கே.பி.ஜெகன் கூறும்போது, “கடந்த 2017-ம் அண்டு என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் நடித்தால் சரியாக இருக்காது என்பதால் நானே கதையின் நாயகனாக நடிக்கிறேன். நான் ஜெகனாகவே படத்தில் வருகிறேன். மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் விவரங்களை விரைவில் அறிவிப்போம்” என்றார்.