அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2024-ம் ஆண்டில் அதிவேகமாக, அதாவது ரிலீஸ் ஆனதில் இருந்து மிகக் குறைந்த நாட்களில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உலக அளவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1700 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1,800 கோடி வசூல் என்ற சாதனையை முறியடிக்கும் என்ற நம்பிக்கை கூடியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சிறப்புக் காட்சி நெரிசலில் பெண் உயிரிழப்பு, அல்லு அர்ஜுன் கைது மற்றும் ஜாமீன், தெலங்கானா திரை அரசியல், போராட்டம் என பல்வேறு சலசலப்புக்கிடையே ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் மட்டும் குறையாமல் புதுப்புது சாதனைகளை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.