புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலையன் (58). கூலித் தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். மகேஸ்வரி மனநிலை பாதிப்பு காரணமாக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
மகன் சிஜோ என்பவருடன் பாலையன் வசித்து வந்தார். சிஜோவுக்கு திருமணமாகவில்லை. தற்போது வெளிநாட்டில் பிளம்பாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு வந்து, வயிற்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நலமடைந்து கடந்த 26-ம் தேதி வெளிநாடு செல்ல சிஜோ தயாரானார்.
இந்த நிலையில் 24-ம் தேதி திடீரென தந்தை மகனுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மகன் தனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். இதனால் மனவேதனையடைந்த பாலையன் விஷம் குடித்தார். இருவரும் ஆபத்தான நிலையில் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலையன் 27-ம் தேதி உயிரிழந்தார். மகன் சிஜோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிஜோ நேற்று (மார்ச் 3) மாலை உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.