ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய படுகொலையை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ராணுவ ஜெனரல்கள் மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மேலும் தெரிவித்துள்ளதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பிரதமர் மோடியின் தலைமையிடமிருந்து தீர்க்கமான பதிலடியை உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இஸ்லாமாபாத்தில் முக்கிய தலைவர்களிடையே பயத்தை வரவழைத்துள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பலர் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டனர். அதற்கான டிக்கெட்டுகளையும் அவர்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இனியும் பொறுமை காக்காது என்பது பாகிஸ்தான் அமைச்சர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். எனவேதான் பதிலடி தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவதாக கூறுகின்றனர்.
தீவிரவாதிகளை மண்ணை கவ்வச் செய்ய வேண்டும் என்று பிரதமர் சூளுரைத்துள்ள நிலையில் அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஆதரவாக இருப்போம் என்று உலக நாடுகள் ஒவ்வொன்றும் உறுதியளித்துள்ளன. இவ்வாறு பிரதீப் பண்டாரி கூறியுள்ளார்.