தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட ஆர்.பி.சவுத்ரி என தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “தென்னிந்திய தமிழ்த் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களின் சிகரமாக திகழ்ந்தவர். சினிமாவில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சரணாலயமாய் இருந்தவர். தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து பெருமை சேர்த்தவர். தமிழ்த் திரையுலகின் பல முன்னணி இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.
தமிழ் சினிமாவின் புதிய முயற்சிகளுக்கு என்றும் உறுதுணையாக இருந்த துணிச்சல்காரர். புதிய கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள், பல தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர். சினிமாத்துறையில் உள்ள அனைவரிடத்திலும் எளிமையாக பழகி பேசக்கூடிய மனிதர்.
முதல் படமான ‘புது வசந்தம்’ தொடங்கி 99-வது படமான ‘மகுடம்’ வரை சிறப்பான கதைகளை தேர்வு செய்து தயாரித்த ஆகச்சிறந்த தயாரிப்பாளர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு கால கட்டங்களில் நிர்வாகியாக பதவி வகித்து சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்.
ஆகச் சிறந்த மனிதர், தயாரிப்பாளர்களின் சிகரம் என்று திரையுலகில் போற்றப்பட்ட ஆர்.பி.ச்வுத்ரி அகால மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி தென்னிந்திய திரைப்படத்துறைக்கு மிகவும் பேரதிர்ச்சியாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.















