தமிழகத்தில் ரூ.7,375 கோடிக்கான புதிய தொழில் முதலீடுகள்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

0
273

தமிழகத்தில், 19 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.7,375 கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு பிப்.10-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற நிலங்களில் ஆக்கிரமி்ப்பு செய்து வாழ்ந்து வரும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழிற்பிரிவுகளில், 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழில் முதலீடுகள் வேலூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில், 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடிக்கான 15 புதிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்தாண்டு அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.38,699 கோடி மதிப்பில் 49,931 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கும் 14 திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது குறி்பபிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here