100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்துள்ள பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங்குக்கு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஆடவர் ஒட்டப்பந்தயத்தில் 25 வயதான குரிந்தர்வீர் சிங் 10.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் 10.10 விநாடிக்குள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து குரிந்தர்வீர் சிங்குக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறும்போது, ”நமது துணிச்சலான இளம் வீரர் குரிந்தர் வீர் சிங் வெறும் 10.09 வினாடிகளில் இலக்கை எட்டி ஒரு புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை குரிந்தர்வீர் பெற்றுள்ளார். பஞ்சாப் மைந்தனான அவருக்கு எனது பாராட்டுகள். அவரால் நமது பஞ்சாப் மாநிலமும், நாடும் பெருமை கொள்கிறது” என்றார்.















