டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்தையும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
வியட்நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நிகிதா போர்வால் உட்பட 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
வியட்நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்தினம் மாலை இறுதிப் போட்டி நடைபெற்றது. முதல்கட்டமாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவின் நிகிதா இடம் பெற்றிருந்தார். அதன்பிறகு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் அந்தப் பட்டியலில் இந்திய அழகி இடம்பெறவில்லை. அடுத்த கட்டமாக 12 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நள்ளிரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அப்போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்டு’ உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்டம் வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்டினார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் (22) இரண்டாவது இடம் பிடித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த தனுசியா செட்டி (25) மூன்றாம் இடத்தைப் பெற்றார். அவரது தாய்மொழி தமிழ் ஆகும். அவரது தந்தை வீரபாண்டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்டம் வென்று, மிஸ் வேர்ல்டு போட்டியில் நுழைந்தார்.
வியட்நாமில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு போட்டியின்போது ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரளமாக பேசினார். “மாற்றம் என்பது நமக்குள் இருந்தே தொடங்க வேண்டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.















