எதிர்க்கட்சிகளின் கேள்வியை தவிர்ப்பதற்காக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் கடந்த ஏப்.5-ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய திமுக மூத்த அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு வருத்தம் தெரிவித்தும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில் பொன்முடி பங்கேற்கவில்லை. மாநில சுயாட்சி குறித்து 110 விதியின்கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுக உறுப்பினர்கள் தவறாமல் ஆஜராகி இருந்தனர். ஆனால் பொன்முடி மட்டும் வரவில்லை. எனினும், முதல்வரின் தீர்மானத்தை சமூக வலைத்தளங்களில் அவர் வரவேற்றிருந்தார்.