குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலை வளாகத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அறிவுப் பகிர்வு மற்றும் வழிகாட்டுதல் திட்டத்தில் பங்கேற்பதற்காக, மூத்த மற்றும் இளம் சிவில் சர்வீஸ் அதிகாரிகளைப் பரிந்துரைக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள நிதி ஆயோக்கில் தலைமைச் செயலாளர்களின் 5-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘முன்னாள் மற்றும் மூத்த ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி ஒற்றுமையின் சிலைக்குச் சென்று, இளம் அதிகாரிகளுடன் ஒரு நாளைச் செலவிட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார்.
பிரதமரின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்தே மத்திய பணியாளர் அமைச்சகம் தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்தார் வல்லப பாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தேசிய ஒற்றுமையின் மாண்புகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை அதே நாளில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிர்வாகம், பொது நிர்வாகம், கொள்கை உருவாக்கம் எனப் பல்வேறு துறைகளில் பரந்த அனுபவமும் நிபுணத்துவமும் பெற்ற மூத்த அதிகாரிகளும், இளம் அதிகாரிகளும் பரஸ்பரம் கலந்துரையாட முறையான வழிகாட்டுதல் தளம் உருவாக்கப்படும்.
நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வருடாந்திர திட்டத்தில் பங்கேற்பதற்காக, தகுதியான மூத்த மற்றும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் குழுவைப் பரிந்துரைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய பணியாளர் அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
