மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் டெப்போ பகுதிகளில் தார் போடப்பட்ட பகுதி ஒரே இரவில் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 14) மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி மற்றும் கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா உள்ளிட்ட போலீசார், நெடுஞ்சாலை துறை இன்ஜினியர் வித்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை போடப்பட்ட அன்று இரவு செம்மண் ஏற்றிய லாரி மற்றும் கனரக லாரிகள் சென்றுள்ளதால் புதிதாக போடப்பட்ட தார் பழுதடைந்துள்ளது என தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு செம்மண் ஏற்றி வந்த லாரி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒருபுறம் தார் போடப்பட்டு சாலை முழுமையாக உறுதியான பிறகு மறுபுறம் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.