தக்கலை அடுத்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). மார்த்தாண்டத்தில் ஒரு பிரபல ஜவுளி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்குப் போதுமான வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கடையிலிருந்து பாஸ்கர் திடீரென விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதைப் பார்த்த உடனே பணியாற்றும் சக ஊழியர்கள் பாஸ்கரை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் பாஸ்கரின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜவுளி கடையில் ஊழியர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.