மார்த்தாண்டம் – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பால தூண்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சுவரொட்டி, நோட்டீஸ் ஒட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தூண்களில் இதற்கு முன்பு ஒட்டிய சுவரொட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அகற்றி வந்தனர். மேலும் தூண்களில் விளம்பரம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் மேம்பால தூண்களில் அனுமதி இன்றி மகளிர் அமைப்பு சார்பில் மாவட்ட மாநாடு அழைப்பு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மேம்பால தூண்களில் சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














