புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்தரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவில் இந்து சமய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமய மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில் கூறியதாவது: – பாரதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது.
சில குழப்பவாதிகள் 1947-ல் பாரதம் உருவானதாக கூறி வருகின்றனர். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்று கூறுகிறார்கள். அவர்கள் அப்படி அரசியலுக்காகச் சொல்லலாம். யாரும் கேளிர் இதுவே சனாதன தர்மம். நண்பர்களே பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது. ஆயிரம் ஆண்டு ஆக்கிரமிப்புகளைச் சந்தித்தோம் அவர்களால் நம்மை அழிக்க முடியவில்லை. பாரதம் பல நிலைகளைக் கடந்து வந்தது சிலரால் புரிய முடியவில்லை. பல தடைகளைத் தாண்டி பலம் குறைந்தாலும் நம் தடைகளைத் தாண்டி வென்று வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். கோவில் தலைவர் குமரேசதாஸ், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.