அமெரிக்காவின் எப்பிஐ ஏஜென்ட் என்று கூறி நாடகமாடி 78 வயது மூதாட்டியை ஏற்ற முயன்றதாக இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் கிஷண் குமார் சிங். 21 வயதாகும் கிஷண், அமெரிக்காவில் குடியேறி படித்து வருகிறார். கடந்த 2024 முதல் ஒஹியோ மாகாணம் சின்சினாட்டி நகரில் கிஷண் வசித்து வருகிறார்.
இந்நிலையில் எப்பிஐ போலீஸ் அதிகாரி என்று கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த 78 வயது மூதாட்டியை கிஷண் ஏமாற்ற முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வட கரோலினாவில் வசித்து வரும் அந்த மூதாட்டியிடம் கிஷண் தன்னை எப்பிஐ-யைச் சேர்ந்த சட்ட அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்துள்ளார்.
மேலும், அந்த மூதாட்டியின் வங்கிக் கணக்குகளில் வேறு யாரோ ஒருவர் நுழைந்து பயன்படுத்தி வருவதாக கிஷண் கூறியுள்ளார். பின்னர், மூதாட்டியிடம் அவரது பணத்தை தான் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், கணக்கில் இருந்து அதிக தொகையை எடுக்குமாறும் கிஷன் அந்த மூதாட்டியை வற்புறுத்தினார். இந்நிலையில் அவர் மீது சந்தேகமடைந்த மூதாட்டி போலீஸில் புகார் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில் கிஷண் கைது செய்யப்பட்டார்” என்றார்.