‘இன்று இல்லை என்றால், நாளை வெல்வோம்’ என கட்சியினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஆடியோ பதிவில் சீமான் கூறியிருப்பதாவது: நான் நலமாக இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். இன்றைக்கு இல்லை என்றால், நாளை வெல்வோம்.
அடுத்த 5 ஆண்டுகள் இருக்கிறது. களத்தில் நின்று வேலை பாருங்கள். மக்களோடு மக்களாக நில்லுங்கள். களத்தில் இருந்து வெளியேற வேண்டாம். திரைக்கவர்ச்சியை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்.
அவரை (விஜய்) ஆட்சியில் உட்கார வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள். தற்போது அவரது ஆட்சியில் வாழ்ந்து பார்ப்பார்கள் தானே. எனவே, அடுத்து நமக்குத் தான் வாய்ப்பு. தைரியமாக இருங்கள். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.















