“என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன்”: விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் மோடி உருக்கம்

0
573

எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தேச சேவைக்காகவே அர்ப்பணிப்பேன் என்று கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பதிவேட்டில் பிரதமர் மோடி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் இந்தியில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கடைகோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதி தேவியும், சுவாமிவிவேகானந்தரும் இந்தப் பாறையில் தியானம் செய்திருந்தனர். அதைப் போற்றும் வகையில் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல்பாறை நினைவகத்தை அமைத்து,விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார். ஆன்மிக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் முன்னோடியாகவும், எனது ஆன்மிகப் பயிற்சியாகவும் இருந்துள்ளார்.

விவேகானந்தரின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டமாகும். இந்த பாறை நினைவுச் சின்னத்தில், நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். எனது வாழ்வின் ஒவ்வொரு நொடியும், என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்.

எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். தேசத்தின் முன்னேற்றத்துக்காகவும், நாட்டு மக்களின்நலனுக்காகவும் எமது மரியாதையை செலுத்துகிறோம். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் சிலை… இதேபோல, கடல் நடுவே உள்ள133 அடி உயர திருவள்ளுவர் சிலை பதிவேட்டில் பிரதமர் கூறியிருப்பதாவது:

புனிதரான திருவள்ளுவரின் சிலை முன்பு நிற்பது ஒரு சிறந்த அனுபவமாக உள்ளது. அவர் இலக்கியம், தத்துவங்களில் தலைசிறந்த மேதை. வாழ்க்கை, சமூகக் கடமை,நீதிநெறி தொடர்பாக திருக்குறள் தரும் ஆழமான கருத்துகள், உலக மக்களின் மனங்களை வென்றுள்ளன.

உலக அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் நான் திருக்குறளின் கருத்துகளை எடுத்துக்கூறும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். திருக்குறளில் பல்வேறு மொழி பெயர்ப்புகளை நான் வெளியிட்டு இருக்கிறேன். வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது குறிக்கோளுக்கு திருக்குறள்தான் ஊக்கமாக அமைந்தது.

உலகளாவியப் பிரச்சினைகளுக்கு தெளிவான தீர்வை வழங்கி, பெரும் பங்காற்றுவதற்கு இந்தியாவை இன்று உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த சூழலில் எக்காலத்துக்கும், உலக அளவில் பொருந்தும் திருக்குறளின் அறிவுசார்ந்த கருத்துகள், அமைதி, வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். இவ்வாறு பிரதமர் இந்தியில் தனது கையெழுத்துடன் பதிவிட் டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here