“விரைவில் சிங்கம் மாதிரி மீண்டு வருவான்” – விஷால் குறித்து ஜெயம் ரவி நெகிழ்ச்சி

0
53

விஷால் உடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான் என்று ஜெயம் ரவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘மதகஜராஜா’ படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் விஷால். அப்போது அவருக்கு ஏற்பட்ட கை நடுக்கம், கண் பார்வை பிரச்சினை உள்ளிட்ட அனைத்துமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ஜெயம் ரவி. அதில் அவர் கூறியதாவது: ‘விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். ஆனால் அவனுடைய தைரியம் அவனை காப்பாற்றும். கூடிய சீக்கிரம் அவன் வருவான். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக அவன் விரைவிலேயே சிங்கம் போல மீண்டு வருவான்” இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜன.14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here