கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

0
248

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும். அதை மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தொடக்க நிலையிலேயே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கள்ளச்சாராய சாவு வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வகை செய்யும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுகவின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்களும் முழு ஆதரவாக இருந்திருக்கின்றனர் என்பது தான் பாமகவின் குற்றச்சாட்டு. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்பதுதான் திமுக அரசின் அச்சம் ஆகும். அதனால் தான் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த தமிழக அரசு, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சாவு வழக்கில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகளையும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் மூடி மறைக்க வேண்டும் என்று திமுக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி ஆகும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, விரைவில் தொடங்கப்படவுள்ள சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தமிழகத்தில் ஒரு சொட்டு கள்ளச் சாராயம் கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here