கடைசி வரை நீடித்த பரபரப்பு: டெல்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்

0
116

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55 ரன்களும் விளாசினர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பாதும் நிசங்கா 41 ரன்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணிக்குத் தொடர்ந்து விக்கெட் சரிவு ஏற்பட்டது. கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here