துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் – தென் மண்டலம் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய தென் மண்டலம் அணி 107.3 ஓவர்களில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 99 ரன்கள் சேர்த்தார்.
தென் மண்டல அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 372 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய கிழக்கு மண்டலம் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இஷான் கிஷன் 80, ஷிகார் மோகன் 52 ரன்கள் விளாசினர். வைபவ் சூர்யவன்ஷி 8, அபிமன்யூ ஈஸ்வரன் 3, சுதீப் குமார் கராமி 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். குமார் குஷாக்ரா 34, முகமது கவுனைன் குரேஷி 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை கிழக்கு மண்டலம் அணி தொடர்ந்து விளையாடியது.
முகமது கவுனைன் குரேஷி சிறப்பாக விளையாடி முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். குமார் குஷாக்ரா 46, அனுகுல் ராய் 64 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிழக்கு மண்டல அணி 99.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. முகமது கவுனைன் குரேஷி 190 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 116 ரன்களும், முகமது ஷமி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
கிழக்கு மண்டலம் அணி டிக்ளேர் செய்த போது 760 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதம் தெரிவித்தன. இதையடுத்து போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் வாயிலாக கிழக்கு மண்டலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
அந்த அணி துலீப் டிராபி தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2013-ல் வாகை சூடியிருந்தது. ஆட்ட நாயகனாக இஷான் கிஷனும், தொடர் நாயகனாக திலக் வர்மாவும் தேர்வானார்கள்.















