சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் 11, 12, ம் தேதிகளில் வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 11-ம் தேதி 1,156 பேருந்துகளும், 12-ம் தேதி 966 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 11-ம் தேதி 150 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 12-ம் தேதி 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 11-ம் தேதி 1,940 சிறப்பு பேருந்துகளும், 12-ம் தேதி 1,530 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் 40 சொகுசு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, துாத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.