​பார​தி​தாசன் படத்துக்கு முதல்​வர், தலைவர்கள் மரியாதை: இருண்ட வீட்​டில் குடும்ப விளக்கேற்றியவர் என புகழாரம்

0
70

பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பாவேந்தர் பாரதிதாசன் 135-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஏப்.29-ம் தேதிமுதல் மே 5-ம் தேதி வரை தமிழ் வளர்ச்சி வாரமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரதிதாசன் பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “வேழத்தின் வலிமையோடு, திகட்டாத தீந்தமிழின் சுவையில், மடமைகளைச் சுட்டெரித்து, இருண்ட வீட்டில் குடும்ப விளக்கேற்றிய இசையமுது பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இணையரை வாழ்த்தும் போதெல்லாம், பாவேந்தர் எடுத்துச் சொல்லியபடி, வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக வாழ வேண்டும் என்பதையே அறிவுரையாக வழங்குகிறேன்.

குன்றிலிட்ட விளக்காகத் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஒளி கொடுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் யாத்த வரிகளைத் தமிழர் நெஞ்சங்களில் ஏந்திப் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பாரதிதாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here