டிரைவராக பணிபுரியும் முன்னாள் தடகள வீரருக்கு மும்பை இளம் தொழிலதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்யன் சிங் குஷ்வா. இவர் ஒரு முறை ஓலா டாக்ஸியில் செல்லும்போது அந்த காரை ஓட்டிய டிரைவர் பராக் பாட்டீல் என்பவர் முன்னாள் தடகள வீரர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 2 தங்கம், 11 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து பராக் பாட்டீல் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஆர்யன் சிங் குஷ்வா கூறியதாவது: எனது ஓலா டாக்ஸி டிரைவர் பராக் பாட்டீல் தடகள வீரர் ஆவார். இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் இவர் பங்கேற்ற போதெல்லாம் பதக்கம் வெல்லாமல் திரும்பியதில்லை.
அதன் பிறகு இவருக்கு ஸ்பான்ஸர் கிடைக்காததாலும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதாலும் தடகளத்தைக் கைவிட்டு தற்போது டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த பதிவைப் பார்ப்பவர்கள் யாராவது பராக் பாட்டீலுக்கு உதவ முன்வரலாம். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆர்யன் சிங்கின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பராக் பாட்டீலின் சாதனைக்குப் பாராட்டு தெரிவித்து வரும் நபர்கள், அவருக்கு உதவவும் முன்வந்துள்ளனர்.