Home விளையாட்டு செய்திகள் எல்லையில் பதற்றம்: பஞ்சாப் – டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!

எல்லையில் பதற்றம்: பஞ்சாப் – டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!

0

இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு அத்துமீறி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்த சூழலில் தரம்சாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த ஆட்டம் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் வியாழக்கிழமை 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா, 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங், 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயர், பேட் செய்ய வந்திருந்த நிலையில் மைதானத்தில் இருந்த மூன்று கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டன.

தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க குவிந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தான் எதிரான கோஷத்தை மைதானத்துக்கு வெளியில் பார்வையாளர்கள் எழுப்பினர். இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது என அருண் துமால் உறுதி செய்தார்.

வியாழக்கிழமை இரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலை அடுத்து இந்தியா பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version