இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றிய வினய் நர்வால் திருமணமான ஒரே வாரத்தில், காஷ்மீருக்கு தேன்நிலவு சென்றபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு நேற்று கடற்படை சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர் வினய் நர்வல் (26). ஹரியானாவைச் சேர்ந்த இவர் கொச்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் ஹிமான்சி என்ற பள்ளி ஆசிரியைக்கும் கடந்த 16-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
விசா கிடைக்க தாமதமானதால் காஷ்மீருக்கு சென்றனர். பஹல்காமில் உள்ள ரோட்டோர கடையில் பேல்பூரி சாப்பிட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த தீவிரவாதி வினய் நர்வலை சுட்டுக் கொன்றார்.
இவரது உடல் அருகே அவரது மனைவி ஹிமான்ஷி சோகத்துடன் அமர்திருந்த போட்டோ வைரலாக பரவியது. வினய் நர்வாலுக்கு டெல்லியில் கடற்படை சார்பில் நேற்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கணவரின் சவப்பெட்டியை கட்டிப்பிடித்து ஷிமான்ஷி அழுதார். ஜெய்ஹிந்த் என வீர முழக்கம் எழுப்பினார்.