‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு

0
354

 இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்பவர்கள், அணு ஆயுத பயன்பாடு கொண்டவர்களுடன் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த இரு நாட்டு தலைவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த பணியை செம்மையாக செய்த அமெரிக்க அரசு அதிகாரிகள், நிர்வாகிகளை பாராட்டுகிறேன். உலக அளவிலான மோதலை அமெரிக்கா தனது தலைமை பண்பு மற்றும் ராணுவ சக்தியால் தடுத்துள்ளது.” என்றார்.

கடந்த 13-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் தரப்பினர் ஒன்றாக இணைந்து இரவு உணவு சாப்பிடும் நாள் வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் முயற்சியை இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மேற்கொண்டது. அதை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பும், ராணுவமும் முறியடித்தது. அதன் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு எதுவும் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியா – பாக். போர் நிறுத்தம் குறித்த முதலில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்பதால் அது குறித்து மத்திய அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வாருகின்றன. இந்தச் சூழலில் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here