பாக்கியை செலுத்தாவிட்டால் வங்கதேசத்துக்கான மின் விநியோகம் நிறுத்தப்படும்: அதானி பவர் நிறுவனம் கெடு

0
214

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் கோடா மின் உற்பத்தி ஆலையின் நிறுவு திறன் 1,496 மெகாவாட்டாக உள்ளது. வங்கதேசத்துக்கு மின்சார விநியோகம் செய்வதில் பைரா (1,244 மெகாவாட்), ராம்பால் (1,234 மெகாவாட்), எஸ்எஸ் பவர் I (1,224 மெகாவாட்) ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து அதானி பவர் (724 மெகாவாட்) மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.

இந்த நிலையில், டாலருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வங்கதேசத்தால் உரிய காலத்தில் அதானி நிறுவனத்துக்கு மின்சார விநியோகத்துக்கான பாக்கியை செலுத்த முடியாமல் திணறி வருகிறது.

வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் (பிபிடிபி) நிலுவைத் தொகையை செலுத்துவதற்கும், 170 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,500 கோடி) கடன் கடிதத்தை (எல்சி) வழங்குவதற்கும் அக்டோபர் 31 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கிரிஷி வங்கி மூலமாக கடன் கடிதத்தை வழங்க பிபிடிபி முற்பட்டாலும், அது மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், டாலர் தட்டுப்பாடும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

நிலுவை காரணமாக, வங்கதேசத்துக்கானமின்சார விநியோகம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், நவம்பர் 7-ம் தேதிக்குள் நிலுவை தொகையான 850 மில்லியன் டாலரை (சுமார் ரூ.7,200 கோடி) செலுத்தவில்லை எனில் மின்சாரம் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்று வங்கதேசத்திடம் அதானி பவர் நிறுவனம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here