சகோதரி பிரியங்காவை ஆதரித்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

0
208

இந்தியாவில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரி பிரியங்கா காந்தியை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது: நம் நாட்டில் தற்போது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகபோராடி பல துன்பங்களை தாங்கி,பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களால் அரசியலமைப்பு சட்டம்உருவாக்கப்பட்டது. அவர்கள் பணிவு, அன்பு மற்றும் தேசத்தின் மீதான ஆழ்ந்த பாசத்துடன் அரசியலமைப்பை நமக்கு எழுதி வழங்கினார்கள். இது கோபம், வெறுப்பால் உருவாக்கப்பட்டது அல்ல.

தற்போது நாட்டில் நடைபெற்றுவரும் போராட்டம் என்பது அன்புக்கும், வெறுப்புக்கும் இடையிலான சண்டை. நம்பிக்கைக்கும், பாதுகாப்பின்மைக்கும் இடையிலான போராட்டம்.

உங்கள் தொகுதியின் (வயநாடு)வேட்பாளர் பிரியங்கா காந்தி இயற்கையில் இரக்க குணம் கொண்டவர்.எனது தந்தை ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய பெண்ணை கட்டித் தழுவியவர் அவர். நளினியை சந்தித்த பிறகு உணர்ச்சிவசப்பட்டு தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியவர். என்னை பொருத்தவரைஇந்தியாவில் செய்யப்பட வேண்டிய அரசியல் இதுபோன்ற அன்பு மற்றும் பாசத்திலான அரசியல் மட்டுமே. வெறுப்பு அரசியல் அல்ல. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

இதைத் தொடர்ந்து, பிரியங்காபேசும்போது, “மத்தியில் ஆளும் மோடி அரசு, பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. அவருடைய நோக்கம் உங்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உருவாக்கி தருவது அல்ல. படித்த இளைஞர்களுக்கு வேலை தருவது அல்ல. சிறந்த சுகாதாரம், கல்வியை வழங்குவது அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here