கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகம் சரக்கல் விளை திருவள்ளுவர் தெருவில் உள்ள பூங்காவில் நேற்று இரவு இரண்டு கோஷ்டியினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதற்கிடையே கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களில் ஒரு கோஷ்டினர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தப்பி ஓடியவர்கள் அரிவாளால் வெட்டியதில் நாகர்கோவிலை அடுத்த என். ஜி. ஓ. காலனி காமராஜர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்ற பேட்டை அய்யப்பன் (வயது 45), ஜெய் கணேஷ் (41) ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியான வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனே போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.