சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை 8,180 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே அமைத்துள்ளன.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் தவிர்த்து மாவட்டம் தோறும் தலா 50 முதல் 100 மெகாவாட் என மொத்தம் 4 ஆயிரம் மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்க கடந்த 2021-22-ல் மின்வாரியம் திட்டமிட்டது. இதற்காக, மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, திருவாரூர், கரூர், நாகை, சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 3,300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. முதல் பூங்காவாக திருவாரூரில் 50 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்சார நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இப் பணிகளை மேற்கொள்ள தமிழக பசுமை எரிசக்தி கழகம் என்ற புதிய நிறுவனம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது.இந்நிறுவனம் மூலம், மேற்கண்ட 6 மாவட்டங்களிலும் சூரியசக்தி மின்சார பூங்காஅமைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.