என்எல்சி – ஒப்பந்த தொழிலாளர் பிரச்சினை: உயர் நீதிமன்றம் உத்தரவு

0
293

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்எல்சி நிர்வாகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ‘‘என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க தொழிலாளர்நல தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் இருக்கும்போது, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரி நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழில் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தீர்ப்பாயம் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். மேலும் என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காணும் வகையில் 6 மாதங்களில் உயர் மட்டக்குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும்.

அந்தக் குழுவில் மத்திய தொழிலாளர் நலத்துறை, நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், என்எல்சி துணை பொதுமேலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here