முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவை மயிலாப்பூர் அலுவலகம் அழைத்து வந்து போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மோசடி வழக்கில்கைதான 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அசோக்நகரில் உள்ளபொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுஅவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
3 பேரையும் அழைத்து சென்றனர்: இந்நிலையில் நிதி நிறுவனநிர்வாக இயக்குநர் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு தேவநாதன் யாதவ் உட்பட 3 பேரையும் போலீஸார் நேற்று அழைத்து வந்தனர்.
பின்னர், சீல்வைக்கப்பட்ட அலுவலக கதவுகளை திறந்து, தேவநாதன் முன்னிலையில் லாக்கர்களை திறந்து சோதனை நடத்தினர். இதேபோல் இந்த நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இன்றும்சோதனை தொடரும் என போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸாரின் தொடர் சோதனையில் இதுவரை 3 கிலோ தங்கம்,33 கிலோ வெள்ளி பொருட்கள், 50-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.