சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, நாங்குநேரி தொகுதி தவெக உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், தொடர்ச்சியாக முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியபடி இருந்தார்.
இதைக் கவனித்த முதல்வர் விஜய், ‘மானியக் கோரிக்கை மீது மட்டும் பேசுமாறு தெரிவிக்கவும்’ என்று ஒரு பேப்பரில் எழுதி உதவியாளர் மூலமாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு கொடுத்தார்.
அதை படித்துப் பார்த்த பேரவைத் தலைவர், மானியக் கோரிக்கை மீது மட்டும் உங்களது கருத்துகளை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் பேசியதாவது:
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: பொதுவாக நமது முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அவர் மற்ற முதல்வர்களைப் போல இல்லை. துறைரீதியான கருத்துகளை மட்டுமே உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
கே.என்.நேரு (திமுக): இதில் ‘மற்ற முதல்வர்களைப் போல’ என்பது தேவையில்லை. இப்படி எல்லாம் புகழ்ந்து பேசினால், எங்களது முதல்வரும் பேசக்கூடாது என்றுதான் சொல்வார்.
பேரவைத் தலைவர்: மக்கள் நலன், நேரம் கருதி, உறுப்பினர்கள் மானியக் கோரிக்கை மீதான கருத்துகளை மட்டும் சொல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்ற ஆலோசனையை முதல்வர் ஒரு பேப்பரில் எழுதி எனக்கு அனுப்பியுள்ளார் என்பதை அனைவரது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.















