நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். அந்த வெற்றியை கடந்த ஆண்டு காலமான சக வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு அந்த அணியினர் சமர்ப்பித்தனர்.
டொரண்டோவில் இந்திய நேரப்படி இந்த தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது போர்ச்சுகல். அந்த அணிக்காக ரொனால்டோ (பெனால்டி) மற்றும் கோன்சாலோ ராமோஸ் ஆகியோர் கோல் பதிவு செய்திருந்தனர்.
இந்த வெற்றிக்கு பிறகு டியோகோ ஜோட்டாவின் 21-ம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்த ரொனால்டோ, சக வீரர்கள் புடை சூழ்ந்து நிற்கையில் கண் கலங்கியபடி வானை நோக்கி வெற்றியை சமர்ப்பித்தார்.
“இந்த தருணம் ஸ்பெஷல் ஆனது. இதை ஆட்டத்துக்கு முன்பே நாங்கள் அறிவோம். இது எங்கள் வாழ்வில் தற்செயலானது. எங்களுடன் அவர் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவரைப் போற்ற இந்த வெற்றி சிறந்தது என்று கருதுகிறோம்” என்று ஆட்டத்துக்கு பிறகு ரொனால்டோ தெரிவித்தார்.
ஜோட்டாவின் நினைவை ராமோஸ், லியோ உள்ளிட்ட வீரர்கள் ஊடகத்தினருடன் பகிர்ந்தனர். அடுத்த சுற்றில் அந்த அணி ஸ்பெயின் உடன் விளையாட உள்ளது.
டியோகோ ஜோட்டா
கடந்த ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் டியோகோ ஜோட்டா காலமானார். போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக 50-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி உள்ளார். கடந்த ஆண்டு நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரை வென்ற போர்ச்சுகல் அணியில் அவர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















