பிஹாரில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
பிஹாரின் முசாபர்பூர் மாவட்டம், பிரம்மபுரா பகுதியில் பிரசாத் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதுடன் அறை முழுவதும் அடர்ந்த புகையும் நிறைந்தது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முசாபர்பூர் மாநகராட்சி ஆணையர் ரிதுராஜ் சிங் கூறுகையில், “மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். என்றாலும் விரிவான விசாரணைக்குப் பின்னரே துல்லியமான காரணம் தெரியவரும். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்துள்ளார்” என்றார்.
பிஹார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த விபத்து மிகுந்த துயரம் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களும் விபத்து குறித்த மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.















