தனிப் பெரும்பான்மையை குறிவைக்கும் தவெக: தஞ்சம் புகும் எம்எல்ஏக்கள்… உதிரும் இரட்டை இலை!

0
22

ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நோக்கி அதிரடியாகக் காய்களை நகர்த்தி வருவதால், அதிமுக எம்எல்ஏ.க்கள் பலர் தவெகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் தலா 2 எம்எல்ஏ.க்களின் ஆதரவோடு தவெக கூட்டணி ஆட்சி அமைத்தது.

இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்துவதால் எந்த நேரத்திலும் அரசியல் நெருக்கடி வரலாம் என தவெக தலைமை கருதியது. இதைக் கடக்க அதிமுகவிலிருந்து எம்எல்ஏ.க்களை இழுக்க வியூகம் வகுக்கப்பட்டது. ஆனால், அதில் உள்ள சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, தவெக இப்போது ஒரு புதிய அதிரடி ஃபார்முலாவைக் கையில் எடுத்திருக்கிறது.

இதுகுறித்து அதிமுக, தவெக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாவது: அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களை நேரடியாக இழுத்து அமைச்சரவையில் சேர்த்தால் கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டச் சிக்கல்கள் வரும் என்பதால், தவெக அந்தப் பேச்சுவார்த்தையைக் கைவிட்டது.

அதேநேரத்தில், தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்டு வென்ற இரு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தவெகவின் தற்போதைய பலம் 107 ஆகக் குறைந்துள்ளது. தற்போதைக்கு மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி சுமுகமாக நடந்தாலும், ஒரு புதிய முதல் தலைமுறை கட்சி எப்போதும் கூட்டணிக் கட்சிகளையே நம்பியிருக்கக் கூடாது என்பதில் தவெகவின் மூத்த தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

எனவே, தவெகவிற்கு மட்டுமே தனித்து 118 எம்எல்ஏ-க்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவது நிச்சயம் என்ற நிலையில், பல தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என தவெக திட்டமிடுகிறது. அதாவது ஒரே நேரத்தில் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, அதில் தவெக வெல்லும்போது, அது தற்போதைய கூட்டணி ஆட்சியை மெதுவாக ஒரு கட்சி மெஜாரிட்டி ஆட்சியாக மாற்ற உதவும். மக்கள் மனநிலையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மாறும் என தவெக தலைமை நம்புகிறது.

இந்த புதிய ‘ராஜினாமா ஃபார்முலா’வின் அடிப்படையில்தான் அதிமுகவின் முக்கிய எம்எல்ஏ.க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் சில அதிமுக எம்எல்ஏ-க்கள் மிக விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யக்கூடும். சில நாட்களுக்கு முன்பு வரை, சண்முகம் தலைமையிலான அதிமுக அதிருப்தி குழுவினர், தங்களை தவெக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

யாருக்கு எந்தெந்த அமைச்சரவை பொறுப்புகள் என்பது குறித்தும் பல கட்ட விவாதங்கள் நடந்தன. ஆனால், இதற்கு தவெக கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளும், விசிகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தவெகவிற்குள்ளும், “அதிமுக அதிருப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்த்தால் அது கட்சியின் ஊழல் எதிர்ப்புப் பிம்பத்தைக் கெடுக்கும்; குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்” என ஒரு தரப்பினர் முட்டுக்கட்டை போட்டனர்.

இருப்பினும் தவெகவின் மற்றொரு தரப்போ, ஆட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் எண்களின் கணக்கைச் சுட்டிக்காட்டி அதிமுகவினரை இணைத்தே தீர வேண்டும் என்று வாதிட்டனர். இறுதியில் தவெக தலைமை ஒரு சமரச முடிவை எடுத்தது. அதன்படி, மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவைக்குள்ளும், அதிமுக அதிருப்தியாளர்கள் அமைச்சரவைக்கு வெளியேயும் இருக்கட்டும்; அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைய விரும்புபவர்களை வரவேற்கலாம்” என்கிற முடிவை எடுத்தது.

இதன் அடிப்படையில்தான் தற்போது அதிமுக எம்எல்ஏ.க்களின் விக்கெட் சரிவு அரங்கேறி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக அதிருப்தி குழுவின் மற்றொரு தரப்பு எம்எல்ஏ.க்கள், தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காக்க மீண்டும் பழனிசாமி தலைமையுடன் சமரசம் செய்துகொள்ளும் வழிகளைத் தேடி ஓடத் தொடங்கியுள்ளனர். ஒட்டுமொத்தத்தில், தவெகவின் தனிப் பெரும்பான்மை வேட்டையால் தமிழக அரசியல் களம் சூடேறியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முதல் முறையல்ல!

முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு தனிப் பெரும்பான்மை இல்லாத திமுக ஆட்சியைப் பலப்படுத்த, மதிமுகவில் இருந்த கம்பம் ராமகிருஷ்ணன், அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு காரணங்களால் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர்.

பின்னர் நடந்த இடைத்தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வென்றனர். அதே போல், 2011-ல் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின், விஜயகாந்துக்கு எதிராகத் திரும்பிய 8 தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தேமுதிக தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதேபோல் தமிழக அரசியலில் தற்போது நடக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here