ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும் என, உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் அன்பழகன், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகரின் மையப்பகுதியில், மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வாகனங்களை நேரடியாக கண்காணிக்கும் சாதனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஆகியவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அரசு தலையிட்டு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்டை மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் பெற்று, மத்திய அரசின் விதிமுறைகளின்படி, வரி செலுத்தி தமிழகத்துக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், நடைமுறையில் மீண்டும் தனியாக மாநில சாலை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, இந்த பெர்மிட் உள்ள அண்டை மாநில பேருந்துகளை வழக்கம்போல் தங்கு தடை இன்றி நமது மாநிலத்துக்குள் வந்து செல்லவும், தமிழகப் பேருந்துகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் போக்குவரத்து துறையின் பல்வேறு சேவைகள், குறிப்பாக, புதிய வாகன பதிவு, அனுமதி மற்றும் தொடர்புடைய நிர்வாக செயல்முறைகள், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிக காலதாமதம் ஆகிறது. அரசு இதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு நடவடிக்கை
தமிழகத்தில் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு விதிக்கப்படும் சாலை வரி, அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு விதிக்கப்படும் சாலை வரியை மறுபரிசீலனை செய்து, குறைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.















